உள்ளூர் செய்திகள்
கொள்ளை

கணவன்-மனைவி உள்பட 5 பேரை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை

Published On 2022-01-13 10:28 GMT   |   Update On 2022-01-13 10:28 GMT
அச்சரப்பாக்கம் அருகே கணவன்-மனைவி உள்பட 5 பேரை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:

அச்சரபாக்கம் அருகே உள்ள கடமலை புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கஜவரதன் (வயது 70). இவர்களது மகன் ஜெகநாதன், மருமகள் ஹேமலதா, பேரன் கவின். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

நேற்று இரவு 8.30 மணி அளவில் கஜவரதன் உட்பட 5 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென 10 பேர் கும்பல் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் கையில் உருட்டுக்கட்டை வைத்து இருந்தனர். அதனை வைத்து வீட்டில் இருந்த அனைவரையும் விரட்டினர்.

மேலும் கஜவரதனையும், அவரது மகன் ஜெகநாதனையும் சரமாரியாக தாக்கினர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் மர்ம கும்பல் கஜவரதன், லட்சுமிபாய், ஜெகநாதன், ஹேமலதா, சிறுவன் கவின் ஆகிய 5 பேரையும் கட்டிப்போட்டனர். இதைத்தொடர்ந்து ஹேமலதா, லட்சுமிபாய் ஆகியோர் அணிந்து இருந்த நகைகளை பறித்தனர். மேலும் வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று பீரோவில் நகை, பணம் உள்ளதா என்று தேடினர்.

2 பீரோவை உடைத்து அதிலிருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்த தப்பி சென்று விட்டனர்.

சிறிது நேரத்திற்கு பின்னர் கஜவரதன் தனது கையில் இருந்த கட்டை அவிழ்த்தார். பின்னர் மற்றவர்களின் கட்டையும் அவிழ்த்து மீட்டார்.

இது குறித்து கஜவரதன் அச்சரப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மொத்தம் 20 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

கொள்ளை கும்பல் வீட்டுக்குள் புகுந்ததும் அனைவரையும் மிரட்டி விட்டு டி.வியின் சத்தத்தை அதிகமாக வைத்துள்ளனர். அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால் பயந்து போன அனைவரும் கூச்சலிடவில்லை.

கஜவரதனின் வீடு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இவரது வீட்டின் அருகே மற்ற வீடுகள் எதுவும் இல்லை. வீட்டின் அருகே உள்ள காலி இடத்தின் வழியாக கொள்ளையர்கள் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் சர்வசாதாரணமாக வந்து தங்களது திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர்.

மேலும் கொள்ளையர்கள் அனைவரும் முகத்தை தெரியாத அளவிற்கு குல்லா அணிந்து இருந்தனர். அவர்கள் நன்கு திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை முடித்துள்ளனர். அவர்கள் வீட்டுக்குள் வருவதற்கு முன்பே ஜவுளி கடையில் பைகளை கட்டப் பயன் படுத்தும் பிளாஸ்டிக் டேக்கை கொண்டுவந்து இருக்கிறார்கள்.

ஹேமலதாவையும், அவரது மகன் கவினையும் அந்த பிளாஸ்டிக் டேக்கால் கட்டி உள்ளனர். கொள்ளை யர்கள் அனைவரும் அதிக அளவில் அவர்களுக்குள் பேச வில்லை. இதனை வைத்து சிக்கிக்கொள்வோம் என்று தெரிந்து காரியத்தை முடித்து உள்ளனர்.

கொள்ளை நடந்த வீட்டின் அருகே மேலும் 5 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே கொள்ளையர்கள் 15-க்கும் மேற்பட்டோர் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இத்தனை பேர் மொத்தமாக கொள்ளையில் ஈடுபடுவது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. எனவே இதில் ஈடுபட்டது வட மாநில கொள்ளை கும்பலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

கொள்ளை திட்டம் முடிந்ததும் அருகே நிறுத்தி இருந்த வாகனத்தில் கொள்ளையர்கள் தப்பிச்சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அச்சரப்பாக்கம், கடமலைபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் ஏதேனும் வந்துள்ளதா? என்று கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் கஜவரதன் வீட்டிற்கு யாராவது வந்து சென்றார்களா? என்ற விவரத்தையும் சேகரித்து வருகின்றனர். கஜவரதனின் வீடு தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கை வரிசையை காட்டி உள்ளது.

கொள்ளை கும்பல் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் அச்சரப் பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News