செய்திகள்
உதயநிதி ஸ்டாலினுடன் பொன். கவுதம சிகாமணி

விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி? -விருப்ப மனு தாக்கல் செய்தார் கவுதம சிகாமணி

Published On 2019-09-23 08:26 GMT   |   Update On 2019-09-23 10:23 GMT
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டி கவுதம சிகாமணி எம்பி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
விழுப்புரம்:

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. 2 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. இந்த இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. போட்டியிட விரும்புவோர் தங்கள் கட்சி தலைமையகத்தில் விருப்பமனுக்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில்  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவேண்டும் என விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்  பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான பொன்.கவுதம சிகாமணி, அண்ணா அறிவாலயத்தில் இந்த விருப்ப மனுவை அளித்துள்ளார்.

எனவே, உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விக்கிரவாண்டி தொகுதிக்கான வேட்பாளரை மு.க.ஸ்டாலின் நாளை அறிவிக்க உள்ளார்.

இதேபோல் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் விருப்ப மனு பெற்றுள்ளார். எனவே, காங்கிரஸ் சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என பேசப்படுகிறது.
Tags:    

Similar News