உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் குறைந்த விலையில் சிமெண்ட் வழங்குவதாக கூறி ரூ.4.83 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரியில் குறைந்த விலையில் சிமெண்டு வழங்குவதாக கூறி ரூ.4.83 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் என்ஜிஜிஓ காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 68). இவர் எலக்டிரிகல் கடை நடத்தி வருகிறார். மேலும் பில்டிங் காண்டிராக்டர் தொழிலும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது செல்போன் வாட்ஸ் அப்புக்கு அடையாளம் தெரியாத நபர் மூலம் ஒரு தகவல் வந்தது. அதில் குறைந்த விலையில் சிமெண்டு மூட்டைகள் வழங் குவதாக தெரிவிக்கப்ட்டு இருந்தது. இதை நம்பி அந்த வாட்ஸ் அப் நம்பரை தொடர்பு கொண்டு 4 ஆயிரம் சிமெண்ட் மூட்டைகளுக்கு ஆர்டர் கொடுத்தார். பின்னர் அந்த நபருக்கு ரூ.4.83 லட்சத்தை ஆறுமுகம் அனுப்பினார்.
இதையடுத்து பணம் பெற்ற நபர், சிமெண்ட் மூட்டைகளை அனுப்பவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை ஆறுமுகம் உணர்ந்தார். பின்னர் இந்த மோசடி குறித்து அவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.