செய்திகள்
பிரதமர் மோடி பெற்ற பரிசுகள், நினைவுப் பொருட்கள் ஏலம்
பிரதமர் மோடி பெற்ற பரிசு மற்றும் நினைவுப் பொருட்களை ஏலம் விடும் நடைமுறையை மத்திய கலாச்சார அமைச்சகம் தொடங்கியுள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தான் பெறும் பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு அதன்மூலம் கிடைக்கும் நிதியை அரசின் திட்டங்களுக்கு வழங்கி வருகிறார்.
இதற்கிடையே, ஜப்பானில் நடந்து முடிந்த ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் போட்டிகளில் தாங்கள் பயன்படுத்திய உபகரணங்களை பிரதமர் மோடிக்கு வழங்கினர். மேலும் சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,300க்கும் மேற்பட்ட பொருட்களை ஏலம் விட இணைய தளம் வாயிலாக நடத்தப்படும் மின்னணு ஏல முறை(E-auction)நேற்று தொடங்கப்பட்டது. இந்த மின்னணு ஏலத்தில் பங்கேற்போர் இணைய தளம் மூலம் அக்டோபர் 7-ம் தேதி வரை பங்கேற்கலாம் என மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் https://pmmementos.gov.in என்ற இணைய தளம் வாயிலாக இந்த மின்னணு ஏலத்தில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தின் மூலம் கிடைக்கும் நிதி கங்கை நதியை தூய்மைப்படுத்தும் ‘நவாமி கங்கா’ திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...சித்து திறமையற்றவர், அவரை முதல்வராக ஏற்க மாட்டேன் -அமரீந்தர் சிங்