தோஷ பரிகாரங்கள்
சயனப் பெருமாள்

இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத்தலம்

Published On 2021-12-10 07:08 GMT   |   Update On 2021-12-10 07:08 GMT
இத்தல ஸ்தல சயனத்தாரையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபடுதல் மிகச் சிறப்பானது.
108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாக விளங்குகிறது மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோவிலை எடுத்துக் கட்டினார் என்று வரலாறு கூறுகிறது.

கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் இன்றும் பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இணைந்து அருள்பாலிக்கிறார். இத்தல ஸ்தல சயனப் பெருமாள் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இவரை வியாழக்கிழமைகளில் வழிபட குருவருளும், திருவருளும் கிட்டும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

கலிகாலத்தில் நமக்கு வரும் கேடுகளைக் களைய இந்தப் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது.

லட்சுமி நரசிம்மரின் சன்னிதியின் எதிரில் உள்ள சுவரில் லட்சுமி நரசிம்மரின் ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி நட்சத்திர தினங்கள், பிரதோஷ காலங்கள், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்திசாயும் மாலை வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய் தீபமேற்றி ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்து வழிபட்டால் எத்தகைய கடன் தொல்லையானாலும் உடனே அகன்று விடும். வறுமை அகலும்.

மாசி மகம் நாளன்று இத்திருத்தலத் தீர்த்தத்தில் நீராடினால் ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத்தலமாக இக்கோவில் உள்ளது.

இத்தல ஸ்தல சயனத்தாரையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபடுதல் மிகச் சிறப்பானது.
Tags:    

Similar News