வழிபாடு
கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் பற்றி அறிவோம்..

Published On 2021-12-22 07:25 GMT   |   Update On 2021-12-22 07:25 GMT
கும்பாபிஷேகம் பற்றிய புரிதல் பலருக்கும் எப்படி இருக்கும் என்பதே சந்தேகம்தான். அது பற்றிய சில விஷயங்களை இங்கே சிறு குறிப்பாக பார்க்கலாம்.
கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்பது நியதி. சில இடங்களில் பல்வேறு காரண காரியங்களுக்காக அவை தள்ளியும் போகலாம். இந்த கும்பாபிஷேகம் பற்றிய புரிதல் பலருக்கும் எப்படி இருக்கும் என்பதே சந்தேகம்தான். அது பற்றிய சில விஷயங்களை இங்கே சிறு குறிப்பாக பார்க்கலாம்.

நான்கு வகை கும்பாபிஷேகம்:

1. ஆவர்த்தம்- ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்து, பிரதிஷ்டை செய்யப்படும் விக்கிரகங் களுக்கு கும்பாபிஷேகம் செய்வது.

2. அனாவர்த்தம் - வழிபாடு இன்றியும், இயற்கை சீற்றங்களாலும் சிதைந்து போன ஆலயங்களை புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

3. புனராவர்த்தம் - கருவறை, பிரகாரம், கோபுரம் ஆகியவற்றில் ஏதாவது சிதைந்து போயிருந்தால், அதற்கு பாலாலயம் செய்து புதுப்பித்து, அஷ்ட பந் தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்துவது.

4. அந்தரிதம் - கோவிலுக்குள், ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதன் பொருட்டு செய்யப்படும் வழிபாடு.

கும்பாபிஷேகத்தில் நடைபெறும் பூஜைகள்:

அனுஞை - காரியங்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து, இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

சங்கல்பம் - இறைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

பாத்திர பூஜை - இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்கான பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு, அந்தந்த பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜித்தல்.

கணபதி பூஜை - காரியம் வெற்றியாக நிறைவேற கணபதியை வழிபடுதல்.

வருண பூஜை - கோவிலை சுத்தம் செய்வதற்காக, வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வணங்குதல்.

பஞ்ச கவ்யம் - ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.

வாஸ்து சாந்தி - தேவர்களை வழிபட்டு, கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி காக்கும் பொருட்டு வழிபடுதல்.

பிரவேச பலி - எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பரிகாரம் செய்து, அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செய்தல்.

மிருத்சங்கிரஹணம் - அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில் இருந்து மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.

அங்குரார்ப்பணம் - எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளை இட்டு முளை வளரச்செய்தல். இதில் 12 சூர்யர்களையும், சந்திரனையும் வணங்குதல்.

ரக்ட்சாபந்தனம் - கும்பாபிஷேகம் செய்யும் ஆசாரியனுக்கு எவ்வித இடையூறும் வரக்கூடாது என்பதற்காக கையில் கட்டப்படும் மந்திரித்த காப்புக் கயிறு கட்டுதல்.

கும்பலங்காரம் - கும்பங்களை, இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.

கலா கர்ஷ்ணம் - விக்ரகத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்கு மந்திரப் பூர்வமாக அழைத்தல்.

யாகசாலை பிரவேசம் - கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

சூர்ய, சந்திர பூஜை - யாகசாலையில் சூர்யனையும், சந்திரனையும் வணங்குதல்.

மண்டப பூஜை - அமைக்கப்பட்டிருக்கும் யாக சாலையை பூஜை செய்தல்.

பிம்ப சுத்தி - விக்கிரகங்களை மந்திரப் பூர்வமாக சுத்தம் செய்தல்.

நாடி சந்தானம் - யாகசாலை இடத்திற்கும், மூலவா் திருமேனிக்கும் தர்ப்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல்.

விசேஷ சந்தி - 36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களுக்கு அர்க்யம் தருவது.

பூத சுத்தி - பூத உடம்பை தெய்வ உடம்பாக மந்திரப் பூர்வமாக மாற்றி அமைத்தல்.

ஸ்பர்ஷாஹுதி - 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.

அஷ்ட பந்தனம் - எட்டு பொருள்களால் ஆன மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.

பூர்ணாஹுதி - யாகத்தை பூர்த்தி செய்தல்.

கும்பாபிஷேகம் - யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை, அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

மகாபிஷேகம் - கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம், அலங்காரம் செய்தல்.

மண்டலாபிஷேகம் - பிறந்த குழந்தையாக விக்ரகத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்கு 48 நாட்கள் விஷேச, அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தி யுடன் இருக்கச் செய்தல்.
Tags:    

Similar News