செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 54 தமிழக மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-03-26 06:07 GMT   |   Update On 2021-03-26 06:07 GMT
கைதான மீனவர்கள் 54 பேரையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன் மற்றும் திரிகோணமலை முகாம்களுக்கு அழைத்து சென்றனர்.
ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் நேற்று முன் தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் மரியசிங்கம் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோரின் விசைப்படகுகளை சிறைபிடித்தனர். மேலும் படகுகளில் இருந்த 20 மீனவர்களை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மற்ற மீனவர்களை அங்கிருந்து விரட்டி அடிதனர்.

இதேபோல் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க சென்ற 34 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களிடம் இருந்து மீன்பிடி படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைதான மீனவர்கள் 54 பேரையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன் மற்றும் திரிகோணமலை முகாம்களுக்கு அழைத்து சென்றனர். அவர்கள் மீது எல்லைதாண்டி மீன் பிடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட 54 மீனவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பரிசோதனை முடிவு வந்ததும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்களா? அல்லது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.

Tags:    

Similar News