செய்திகள்
ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-17 13:42 GMT   |   Update On 2020-10-17 13:42 GMT
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் பழனி, துணைத் தலைவர் உமாமகேஸ்வரி, பொருளாளர் தனபால், ஆலோசகர்கள் ராஜேந்திரன், உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் முருகன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் சுகுமார், அனைத்து பணியாளர் சங்கத் தலைவர் ரோஸ், பொருளாளர் மருது ஆகியோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

இதில் கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியம் தெற்குதிட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீதான வன்கொடுமை வழக்கை திரும்ப பெற வேண்டும். ஊராட்சி தலைவர்களுக்கு பதிலாக கணவர், உறவினர்கள் செயல்படுவதை தடை செய்ய வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஒன்றிய துணைத்தலைவர் அந்தோணிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கதலைவர் நீலந்தாங்கல் எம்.சுகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் இ.வேலு, செயலாளர் கே.சவுந்தரராஜன், பொருளாளர் இ.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் என். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News