செய்திகள்
விசாரணை

103 கிலோ தங்கம் மாயமான வழக்கு- முன்னாள் போலீஸ் அதிகாரியிடம் அதிரடி விசாரணை

Published On 2020-12-19 02:33 GMT   |   Update On 2020-12-19 02:33 GMT
சென்னையில் சிபிஐ போலீசார் பறிமுதல் செய்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில் சிபிஐ உயர் அதிகாரி ஒருவர் ஆஜரானார். அவரிடம் சிபிஐ சிறப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
சென்னை:

சென்னை பாரிமுனையில் செயல்படும் தனியார் தங்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் 400.47 கிலோ தங்கத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கம், அதே குறிப்பிட்ட நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அந்த லாக்கரின் சாவிகள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் குறிப்பிட்ட லாக்கரை திறந்து பார்த்தபோது, 400.47 கிலோ தங்கத்தில், 103.864 கிலோ தங்கம் மாயமாகி விட்டது.

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.

இதற்கிடையில் மாயமான 103 கிலோ தங்கம் பற்றி சி.பி.ஐ. போலீசாரும் தனியாக ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்று நடத்தப்பட்ட இந்த விசாரணையில் சி.பி.ஐ.யில் வேலை பார்த்த முன்னாள் தென்மண்டல இணை இயக்குனர் ஒருவர் ஆஜர் ஆனார். அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அந்த அதிகாரி தமிழக போலீசிலும் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News