திருவோணம் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் மீது வழக்கு
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நெய்வேலி வடபாதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பார்த்திபன் (வயது 20), ரெகுநாதபுரம் அருகே உள்ள தட்டாமனைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா(34).
இருவரும் நெய்வேலி பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று திருட்டு மணல் ஏற்றிக்கொண்டு நெய்வேலி சோளம் குளம் பகுதியில் சென்றனர். தகவலறிந்த வாட்டாத்திக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையிலான போலீசார் மடக்கிப்பிடித்து இருவர் மீதும் வழக்குபதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
திருவோணம் பகுதிகளில் அதிகப்படியாக திருட்டு மணல் ஏற்றிக்கொண்டு மினிலாரி மற்றும் கனரக வாகனங்களில் அதிவேகமாய் விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தி திருவோணம் பகுதிகளில் இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.