செய்திகள்
கொங்கு நாடு விவகாரத்தில் அடுத்து என்ன? -வானதி சீனிவாசன் பரபரப்பு தகவல்
மத்திய அரசின் தடுப்பூசிகளை சிலர் தனியார்களுக்கு கொடுப்பதாக வந்த தகவல் தொடர்பான ஆதாரத்தை திரட்டி வருவதாகவும் அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் கூறினார்.
கோவை:
கோவை சித்தாப்புதூர் பா.ஜ.க. அலுவலகத்தில் ஆடிட்டர் ரமேஷ் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு ஆடிட்டர் ரமேஷின் உருவப்படத்துக்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷின் கொலை வழக்கிற்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை; வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தினார்.
மத்திய அரசின் தடுப்பூசிகளை சிலர் தனியார்களுக்கு கொடுப்பதாக வந்த தகவல் தொடர்பான ஆதாரத்தை திரட்டி வருவதாகவும் அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக இடிக்கப்பட்ட கோவில்களை மீண்டும் மாற்று இடங்களில் கட்டி தந்து மக்களின் மனித உணர்வுகளைக் காக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தை தனியாக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு இல்லை என்று கூறிய வானதி சீனிவாசன், “கொங்கு பகுதி மக்களின் தேவைகள், வளர்ச்சிகள் உள்ளிட்டவை இம்மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது; எனவே, வரும் நாட்களின் மாநில அரசாங்கம் எப்படி இம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுகிறதோ அதன் அடிப்படையில் கொங்குநாடு குறித்து அடுத்தகட்ட பரீசிலனை வரலாம்” எனத் தெரிவித்தார்.