செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

பல நாடுகளுக்கு தடுப்பூசி உதவி- இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

Published On 2021-01-24 02:57 GMT   |   Update On 2021-01-24 02:57 GMT
தெற்கு ஆசிய நாடுகளுக்கு லட்சக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளை வழங்கி, உலக சுகாதாரத்தில் இந்தியா அளித்து வரும் பங்களிப்பை பாராட்டுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:

இந்தியாவில் கடந்த 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேநேரம் அண்டை நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் பல நாடுகளுக்கு நன்கொடையாகவும், மானியமாகவும் அளித்து வருகிறது.

அந்தவகையில் பூடான், மாலத்தீவுகள், நேபாளம், வங்காளதேசம், மொரீஷியஸ், மியான்மர், செசல்ஸ் ஆகிய நாடுகளுக்கு மானியமாக ஏற்றுமதி செய்துள்ள இந்தியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, பிரேசில், மொராக்கோ போன்ற நாடுகளுக்கு விரைவில் வர்த்தக ரீதியாகவும் ஏற்றுமதி செய்ய உள்ளது.

இந்தியாவின் இந்த மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிரிவு தனது டுவிட்டர் தளத்தில், ‘தெற்கு ஆசிய நாடுகளுக்கு லட்சக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளை வழங்கி, உலக சுகாதாரத்தில் இந்தியா அளித்து வரும் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். ஒரு உண்மையான நண்பனாக, சர்வதேச சமூகத்துக்கு தனது மருத்துவ துறையை இந்தியா பயன்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டு உள்ளது.
Tags:    

Similar News