செய்திகள்
ஜிகே வாசன்

கொரோனாவை வெல்வதற்கு மோடியின் அறிவுரையை பின்பற்ற வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2020-10-23 07:37 GMT   |   Update On 2020-10-23 07:37 GMT
பிரதமர் மோடியின் ஒவ்வொரு வார்த்தையும் நாட்டிற்கும், நாட்டின் ஒவ்வொரு மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை, பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கையின் மூலமாகவும், பேச்சின் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இரண்டு நாள்களுக்கு முன்னர் அளித்த உரையில், தற்பொழுது ஊரடங்கு வேண்டுமானால் நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கொரோனா வைரஸ் இன்னும் நீடிக்கிறது. தொற்று பரவ அதிகம் வாய்ப்பிருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். கொரோனாவிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் நாட்டிற்கும், நாட்டின் ஒவ்வொரு மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது. இவற்றை அனைவரும் பின்பற்றி விழிப்புணர்வுடன், கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கையில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News