ஏப்ரல் மாதத்தில் கோர தாண்டவம்- தமிழகத்தில் 1,340 பேர் உயிரை பறித்த கொரோனா
சென்னை:
கடந்த ஆண்டு கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தீவிர தடுப்பு நடவடிக்கையின் மூலம் படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் கணிசமாக குறைந்த பாதிப்பு மார்ச் மாதத்தில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா 2-வது அலை தாக்கம் தீவிரம் அடைந்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் தொற்று மின்னல் வேகத்தில் பரவியது. சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு இருந்த நிலையில் பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் பரவியது.
தொற்றின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்ததால் அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. ஏப்ரல் மாதம் 1-ந் தேதி தமிழகத்தில் 2,817 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 30-ந் தேதி இந்த எண்ணிக்கை 7 மடங்காக அதிகரித்தது.
தமிழகம் முழுவதும் 18 ஆயிரத்து 692 பேர் இந்நோய் தொற்றுக்கு ஆளாகினர். கடந்த மாதம் 1-ந் தேதி 19 பேர் உயிர் இழந்த நிலையில் 30-ந் தேதி 113 பேர் இந்நோய்க்கு பலியாகி உள்ளனர்.
சென்னையில் 1,083 பேர் இம்மாத தொடக்கத்தில் பாதிக்கப்பட்டனர். அதுவே இறுதியில் 5,473 பேராக உயர்ந்தது.
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று 10-ந் தேதி 5,989 பேரை தாக்கியது. 15-ந் தேதி 7,987 பேர் பாதிக்கப்பட்டனர். 20-ந் தேதி இந்த எண்ணிக்கை 10,986 ஆக மேலும் உயர்ந்தது.
தொடர்ந்து 25-ந் தேதி 15,659 பேர் பாதிக்கப்பட்டனர். 82 பேர் உயிர் இழந்தனர். 28-ந் தேதி பாதிப்பு 16,665 ஆகவும் உயிர் இழப்பு 98 ஆகவும் உயர்ந்தது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் உயிர் இழப்பு 20-க்குள் இருந்த நிலையில் பின்னர் படிப்படியாக அதிகரித்தது.
10-ந் தேதி 23 பேரும், 15-ந் தேதி 29 பேரும், 20-ந் தேதி 48 பேரும், 25-ந் தேதி 82 பேரும், 26-ந் தேதி 94 பேரும், 27-ந் தேதி 77 பேரும், 28-ந் தேதி 98 பேரும், 29-ந் தேதி 107 பேரும், 30-ந் தேதி 113 பேரும் அதிகபட்சமாக நோய்க்கு பலியாகி உள்ளனர்.
உயிர் இழப்பை குறைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் மூலம் தற்போது இறப்பு விகிதம் குறைந்துள்ளது. மற்ற மாநிலத்தை விட தமிழகத்தில் கொரோனா உயிர் இழப்பு குறைவாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த மே மாதத்தில் தொற்று மேலும் தீவிரமடையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் பாதிப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்க கூடும் என்பதால் சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.