செய்திகள்
சென்னையில் பெண்கள், குழந்தைகளுக்கான உதவி மையம் -காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்
பாலியல் தொல்லைகளில் இருந்து மாணவிகளை பாதுகாக்கும் வகையில் பெண்கள், குழந்தைகளுக்கான உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கான உதவி மையத்தை காவல் துறை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று தொடங்கி வைத்தார்.
பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மையத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்க சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கும் அவற்றிலிருந்து தங்களை காப்பதற்கும் உரிய சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவிகளிடம் சில ஆசிரியர்கள் அத்துமீறுவதாக புகார்கள் வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் பள்ளிகளில் ஆன்லைன் புகார் மையம் தொடங்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லைகளில் இருந்து மாணவிகளை பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.