செய்திகள்
உழவர்சந்தைகளில் காய்கறிகள் விற்பனை நேரம் மாற்றம்
திருப்பூர் மாவட்ட உழவர்சந்தைகளில் காய்கறி விற்பனை நேரம் மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தைகளுக்கு வரவேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
திருப்பூர்:
முழு ஊரடங்கால் திருப்பூர் தெற்கு, வடக்கு, தாராபுரம், உடுமலையில் உழவர் சந்தைகளுக்கு விவசாயிகள் காய்கறி கொண்டு வர ஏதுவாக மாலை 6மணி முதல் இரவு9மணி வரையும், காலை 4 மணி முதல் 8 மணி வரையும் செயல்பட்டன.
தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாலை 3 மணி முதல் காலை 8 வரை மட்டும் சந்தை செயல்படும். மாலை நேர சந்தை கிடையாது. நடமாடும் காய்கறி வாகனங்கள் மாலை நேரம் வர வேண்டாம். காலையில் மட்டும் வந்து காய்கறியை பெற்றுச் செல்ல வேண்டும்.இரவு விற்பனையை தவிர்த்து காலை முதல் மதியம் வரை சுகாதாரத்துறையின் வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடித்து விற்க வேண்டும்.
சந்தை செயல்படும் நேரம் மாற்றப்பட்ட போதும் மக்கள், ‘சந்தைக்கு வரவேண்டாம். வீடுகளுக்கு அருகில் காய்கறி கொண்டு வரும் வாகனங்கள், திறக்கப்படும் மளிகை கடைகளில் காய்கறி வாங்க வேண்டும்.பைக், கார்களில் சந்தைக்கு வர வேண்டாம். அனுமதியில்லை என உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.