செய்திகள்
கர்தார்பூர் சீக்கிய குருத்வாரா

வாக்குறுதியை மீறிய பாகிஸ்தான் - கர்தார்பூர் பாதை திறப்பு விழாவிலும் கட்டணம் வசூலிக்க முடிவு

Published On 2019-11-08 11:32 GMT   |   Update On 2019-11-08 11:32 GMT
கர்தார்பூர் பாதை திறப்பு விழா மற்றும் குருநானக் தேவ் பிறந்தநாளின்போது இந்திய யாத்ரீகர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவித்த பாகிஸ்தான் அரசு தற்போது பின்வாங்கியுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவால் மாவட்டத்தில் ராவி நதிக்கரையோரத்தில் ஸ்ரீ நான்கானா சாஹிப் என்ற இடத்தில் 550 ஆண்டுகளுக்கு முன்னர் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் பிறந்ததாக நம்பப்படுகிறது.

அவர் உயிர்நீத்த இடம் அதே மாகாணத்துக்குட்பட்ட கர்தார்ப்பூரில் சமாதியாக பாதுகாக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. குருநானக் தேவின் 550-வது பிறந்தநாள் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி,  குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளையொட்டி, பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்லும் இந்திய பக்தர்களின் வசதிக்காக இந்தியா-பாகிஸ்தான் அரசுகளால் அமைக்கப்பட்ட கர்தார்பூர் பாதையை திறந்து வைக்க பிரதமர் மோடி  நாளை (9-ம் தேதி) பஞ்சாப் செல்கிறார்.

பாகிஸ்தான் எல்லையில் இந்த பாதையை அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் நாளை திறந்து வைக்கிறார்.



இந்த கர்தார்பூர் பாதை வழியாக அன்றாடம் 5 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கு அனுமதி அளிக்க பாகிஸ்தான் அரசு  தீர்மானித்துள்ளது. இதற்காக பாகிஸ்தான் செல்லும் சீக்கியர்கள் பாஸ்போர்ட் கொண்டு செல்ல தேவையில்லை. இந்தியாவில் வாழ்வதற்கான ஏதாவது ஒரு அரசு ஆவணத்தை காண்பித்தால் போதும் என அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு நுழைவு கட்டணமாக 20 டாலர்கள் (சுமார் 1400 ரூபாய்) வசூலிக்கப்படும் என முன்னர் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

எனினும், கர்தார்பூர் பாதை திறப்பு விழா தினமான 9-11-2019 மற்றும் குருநானக் தேவ் பிறந்தநாளான 12-11-2019 அன்று மட்டும் இந்திய யாத்ரீகர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கிய பாகிஸ்தான் மேற்கண்ட இருநாட்களிலும் கட்டணம் வசூலிக்கப்படும் என இன்று அறிவித்துள்ளது.
Tags:    

Similar News