செய்திகள்
சென்னை ஐகோர்ட்

இந்து சமய அறநிலையத்துறை புதிய கல்லூரிகள் தொடங்க கூடாது- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-11-15 08:39 GMT   |   Update On 2021-11-15 08:39 GMT
கல்லூரி தொடங்கிய ஒரு மாதத்துக்குள் மத வகுப்புகள் நடத்தவில்லை என்றால் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:

தமிழக சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின்போது, 1,500 கோடி ரூபாய் மதிப்பில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், மாநிலம் முழுவதும் பத்து கோயில்களின் நிதியில் 150 கோடி ரூபாய் செலவில் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் சென்னை கொளத்தூரிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சார்பில் பரமத்திவேலூரிலும், பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் தொப்பம்பட்டியிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் விளாத்திகுளத்திலும் என 4 இடங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் கடந்த அக்டோபர் 6-ந்தேதி அரசாணை பிறப்பித்தார்.

இந்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரியும், அதை ரத்து செய்து, கோவில் சொத்துக்களை உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பயன்படுத்த தடை விதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் டி.ஆர்.ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி கல்லூரிகள் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. கோவில் அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால், 20 ஆயிரத்திற்கும் மேலான கோவில்களில் அறங்காவலர்கள் இல்லை. கொளத்தூரில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக சொத்து எதுவும் இல்லை. முதல்-அமைச்சர் தொகுதி என்ற காரணத்தினால் அங்கு அவசரமாக கல்லூரி தொடங்கப்படுகிறது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கல்லூரிகளை தொடங்குவது தொடர்பாக விளம்பரம் வெளியிட்டு ஆட்சேபங்களை பெற்ற பிறகே அனுமதி வழங்க வேண்டும். ஆனால் கோவில் நிர்வாகத்தில் இருந்து எந்த விண்ணப்பமும் அளிக்கப்படாமல் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகங்களும் கல்லூரி தொடங்க அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை எனவும், கோவில்களில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் கல்லூரிகள் அமைக்கப்படுவதாகவும், உபரி நிதியை, போதிய நிதி இல்லாத பிற கோவில்கள் சீரமைப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், இது அரசின் கொள்கை முடிவு என்றும், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தை பின்பற்றியே கல்லூரிகள் தொடங்கப்படுவதாகவும், பல கோவில்களில் இருந்து பொது நிதிக்கு பெறப்பட்ட பங்களிப்பு நிதியில் இருந்து தான் கல்லூரிகள் தொடங்கப்படுவதாகவும், மத வகுப்புகளும் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்னும் 2, 3 வாரங்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் எனத் தெரிவித்த அட்வகேட் ஜெனரல், கடந்த 11 ஆண்டுகளாக அறங்காவலர்கள் இல்லை எனவும் வழக்கு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார்.

இதையடுத்து, நீதிபதிகள், கோவில் நிதியை பயன்படுத்துவதால் சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் சட்டப்படி தான் கல்லூரிகள் தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அடிப்படை நடைமுறைகள் பின்பற்றாமல் துவங்கப்பட்டுள்ள 4 கல்லூரிகளின் செயல்பாடு இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது.

அதேசமயம், 4 கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளை அறங்காவலர்களை நியமிக்காமலும், நீதிமன்ற அனுமதியின்றியும் தொடங்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், 4 கல்லூரிகளில் இந்து மத வகுப்புகள் தொடங்க வேண்டும். கல்லூரி தொடங்கிய ஒரு மாதத்துக்குள் மத வகுப்புகள் நடத்தவில்லை என்றால் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது எனவும் உத்தரவிட்டனர்.

பின்னர் மனுவுக்கு 3 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 5 வாரங்கள் தள்ளிவைத்தனர்.


Tags:    

Similar News