செய்திகள்
ஜோலார்பேட்டை அருகே எலக்ட்ரிகல்ஸ் கடையில் ரூ.3 லட்சம் பொருட்கள் திருட்டு
ஜோலார்பேட்டை அருகே எலக்ட்ரிகல்ஸ் கடையில் ரூ.3 லட்சம் பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் (வயது 34). இவர், அதே பகுதியில் எலக்ட்ரிகல்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை மூடி விட்டு நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது முன்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்ற பார்த்தபோது, ஷட்டர் கதவும் உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடையில் வைத்திருந்த விலை உயர்ந்த தாமிர வயர்கள், காயல்கள், 15 நீர்மூழ்கி மோட்டார்கள் என ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டுப்போய் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர், ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகையை பதிவு செய்தனர்.