உள்ளூர் செய்திகள்
தத்துவம், வரலாறு, சமூகம், குழந்தைகளுக்கான இலக்கியம் உள்பட பல்வேறு தலைப்புகளில் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர்:
திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள கே.ஆர்.சி.சிட்டி சென்டரில் 18-வது திருப்பூர் புத்தகத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவுக்கு வரவேற்பு குழுத்தலைவர் வக்கீல் மோகன் தலைமை வகித்தார். புத்தகக் கண்காட்சியை திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் ரிப்பன் வெட்டித் திறந்துவைத்தார்.
கண்காட்சியின் முதல் நூல் விற்பனையை மாநகராட்சி மேயர் என்.தினேஷ்குமார் தொடங்கி வைக்க, துணை மேயர் ஆர். பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார். கண்காட்சியில், பல்வேறு முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனை நிறுவனங்கள் சார்பில் 95 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், கதை, கவிதை, அறிவியல், அரசியல், சமூகம், தத்துவம், வரலாறு, சமூகம், குழந்தைகளுக்கான இலக்கியம் உள்பட பல்வேறு தலைப்புகளில் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் வாசகர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி விலையிலும், மொத்தமாக வாங்கும் நபர்களுக்கு 30 சதவீத தள்ளுபடியிலும் நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.