ஆன்மிகம்
ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தபோது எடுத்தபடம்.

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு

Published On 2020-09-28 04:39 GMT   |   Update On 2020-09-28 04:39 GMT
திருப்பதி கோவிலில் பிரமமோற்சவ விழாவில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. அதன்பின் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 19-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. தினமும் காலை, மாலை இரு வேளை அந்தந்த நாளுக்குரிய வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று காலை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக ஸ்ரீவாரி புஷ்கரணியில் தீர்த்தவாரி நடக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலால் கோவில் உள்ளே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறிய தொட்டியில் தண்ணீரை நிரப்பி அதில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. சக்கரத்தாழ்வாரை அர்ச்சகர்கள் தொட்டி தண்ணீரில் மூன்று முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்தனர்.

முன்னதாக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி, சுதர்சன சக்கரத்தாழ்வார் ஆகியோரை கொண்டு வந்து, தொட்டிக்கு அருகில் எழுந்தருள செய்யப்பட்டு மஞ்சள், சந்தனம், குங்குமம், தேன், பால், தயிர், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இரவு கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
Tags:    

Similar News