செய்திகள்
பாலித்தீன் கழிவுகளால் ஆடுகளின் உயிருக்கு ஆபத்து
பாலிதீன் கழிவுகளை உட்கொள்ளும் போது ஆடுகளின் வயிற்று பகுதியில் ஓரமாக தங்கி விடும். சில நாட்கள் கழித்து வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதை ஏற்பட தொடங்கும்.
அவிநாசி:
திருப்பூர் மாநகர் மற்றும் அவிநாசி-சேவூர் ரோடு உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் குப்பை கொட்டும் இடங்களில் அப்பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் கடைக்காரர்கள் கழிவுகளை குப்பைதொட்டியில் கொட்டாமல் வெளியில் கொட்டி விடுகின்றனர்.
இதன்காரணமாக அப்பகுதியில் ஆடுகளை வளர்ப்போர் மேய்ச்சலுக்கு விடும் போது அந்த ஆடுகள் குப்பை கழிவுகளில் உள்ள உணவுகளை தேடி பிடித்து உண்கின்றன. பல நேரங்களில் பாலிதீன் கழிவுகளை உட்கொள்கின்றன. இதனால் ஆடுகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய கால்நடை அறிவியல் துறை உதவி பேராசிரியர் சித்ரா கூறுகையில், வெள்ளாடுகள் குப்பைக்கழிவுகளில் உள்ள பாலிதீன் கழிவுகளை சில நேரங்களில் உட்கொள்ளும். இது அவற்றின் வயிற்று பகுதியில் ஓரமாக தங்கி விடும். சில நாட்கள் கழித்து வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதை ஏற்பட தொடங்கும்.
காய்கறிகளில் இருந்து அகற்றப்படும் இலை, தழைகளை ஆடுகளுக்கு உணவாக கொடுப்பதில் தவறில்லை. ஆனால், குப்பை கழிவுகளில் கிடக்கும் கெட்டுப்போன அழுகிய நிலையில் உள்ள காய்கறி கழிவுகளை அவை உட்கொள்வது நல்லதல்ல. ஆடு வளர்ப்போர் அவற்றின் உடல்நலன் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.