செய்திகள்
ஆன்லைன் ஏல முறைக்கு விவசாயிகள் எதிர்ப்பு
விளை பொருட்களுக்கான தொகையை நேரடியாக வழங்காமல் வங்கி பரிவர்த்தனை மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அவிநாசி:
அரசின் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனைகூடங்கள், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்கள் சார்பில் இயங்கும் விற்பனை கூடங்களில் மஞ்சள், பருத்தி, நிலக்கடலை, தேங்காய், கொப்பரை உள்ளிட்ட பல்வேறு விளைபொருட்களின் ஏல விற்பனை நடக்கிறது.
இதுவரை பகிரங்க ஏலம் தான் நடத்தப்பட்டு வருகிறது. ஏல விற்பனையில் வெளிப்படை தன்மையை கொண்டு வரவும், தரமான பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க செய்யும் நோக்கில் ‘ஆன்லைன்’ மூலம் ஏலம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.
விளைபொருட்களுக்கான தொகையை நேரடியாக வழங்காமல் வங்கி பரிவர்த்தனை மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக பகிரங்க ஏலத்தை ரத்து செய்து மறைமுக டெண்டர் ஏல முறை கொண்டு வரப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த ஏல முறைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
சில விவசாயிகள் பகிரங்க ஏல விற்பனையை தான் விரும்புகின்றனர். தொடர்ந்து வற்புறுத்தும் பட்சத்தில் தனியார் ஏல மையங்களுக்கு சென்று விடும் வாய்ப்புள்ளது என்றனர்.