செய்திகள்
பழனியில் தைப்பூச திருவிழா- பாதுகாப்புக்கு வந்த போலீசுக்கு கொரோனா
பழனி கோவில் தைப்பூச திருவிழா பாதுகாப்புக்கு வந்த போலீஸ் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பழனி:
பழனி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு இன்று முதல் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என தென்மண்டல ஐ.ஜி முருகன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனி டி.எஸ்.பி அலுவலகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மட்டுமின்றி சுகாதார பணியாளர்கள், கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் என அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என தெரியவந்தால் மட்டுமே பணியில் ஈடுபடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.