செய்திகள்
நீரில் மூழ்கி பலி

ஊஞ்சலூர் அருகேதடுப்பணையில் மூழ்கி கார் டிரைவர் பலி

Published On 2020-10-12 06:06 GMT   |   Update On 2020-10-12 06:06 GMT
ஊஞ்சலூர் அருகே சுற்றுலா வந்த கார் டிரைவர் தடுப்பணையில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
ஊஞ்சலூர்:

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் கென்னடி. அவருடைய மகன் ஸ்டீபன் (வயது 28). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜோதிடர் முகேசுக்கு கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேரும் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு காரில் சுற்றுலாவாக நேற்று காலை ஈரோடு மாவட்டம் கொடுமுடி வந்துள்ளார்கள். பின்னர் அவர்கள் மகுடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, ஊஞ்சலூர் அருகே உள்ள காரணம்பாளையம் பகுதி காவிரியாற்றுக்கு (தடுப்பணை) சென்றனர்.

தடுப்பணையை பார்த்ததும் அனைவருக்கும் குளிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. உடனே அனைவரும் தடுப்பணையில் இறங்கி குளித்துள்ளனர். இதில் ஸ்டீபன் மட்டும் ஆழமான பகுதியில் குளித்துள்ளார். இதனால் அவர் சுழலில் சிக்கினார்.

உடனே அவர், “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அபயக்குரல் எழுப்பினார். இதை பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதற்குள் ஸ்டீபன் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மீனவர்கள் அங்கு சென்று தண்ணீரில் நீந்தி ஸ்டீபனை தேடி பார்த்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு ஸ்டீபன் பிணமாக மீட்கப்பட்டார்.

இதுபற்றி அறிந்ததும் மலையம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஸ்டீபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ஸ்டீபனுக்கு திருமணமாகி பார்த்தி (24) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
Tags:    

Similar News