செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை படத்தில் காணலாம்.

பெங்களூருவில் இருந்து ஆற்காட்டுக்கு கடத்திச் சென்ற ரூ.5 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2021-01-20 02:27 GMT   |   Update On 2021-01-20 02:27 GMT
வேலூரில் ரூ.5 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:

பெங்களூருவில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டுக்கு குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், ஜெகநாதன் மற்றும் போலீசார் கிரீன் சர்க்கிள் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து விசாரணை செய்தனர். ஆட்டோவில் இருந்தவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர்.

அப்போது, ஆட்டோவில் டிரேக்களுக்கு அடியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர் போலீசார் டிரைவர் மற்றும் கிளீனரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம், சோமாசிபாடியை சேர்ந்த ஹைதர்அலி (வயது 36), பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதியை சேர்ந்த பர்தான் (35) என்பதும், ஆற்காட்டுக்கு குட்கா பொருட்களை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, ஆட்டோவுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News