செய்திகள்
விபத்து

தஞ்சை அருகே மின் கம்பியில் பஸ் உரசியதில் 3 பயணிகள் பலி

Published On 2021-01-12 08:15 GMT   |   Update On 2021-01-12 08:15 GMT
தஞ்சையில் இருந்து திருவையாறுக்கு இன்று மதியம் புறப்பட்ட தனியார் பஸ் மின் கம்பியில் உரசியதில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சையில் இருந்து இன்று மதியம் தனியார் பஸ் திருவையாறு நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர்.

இந்த பஸ் திருவையாறை அடுத்த வரகூர்-கண்டியூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னே சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது அருகில் இருந்த மின்கம்பியின் மீது பஸ் உரசியது. இதில் பஸ்சில் இருந்த 5 பேருக்கு மின்சாரம் தாக்கியது. உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயயே உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்த திருவையாறு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த 3 பேர் யார்? என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் காயமடைந்த 10 பேரில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News