செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

விலையில்லா வேட்டி- சேலை தயாரிக்க நெசவாளர்களுக்கு உடனே நூல் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

Published On 2021-11-24 07:12 GMT   |   Update On 2021-11-24 07:12 GMT
பின்னலாடை தயாரிப்புக்கு மூலப்பொருளாக இருக்கும் நூலின் விலையை குறைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். நூலின் பங்கு ஆடை தயாரிப்பில் இன்றியமையாததாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்ந்து வருகிறது.

இந்த விலை உயர்வால் ஆடை தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

நூல் விலை உயர்வினாலும், துணி உற்பத்திக்கான புதிய ஆர்டர் கிடைக்கப் பெறாததாலும், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் போன்ற மாவட்டங்களில் உள்ள விசைத்தறி நெசவாளர்கள் பல மாதங்களாக வேலையின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

விசைத்தறி ஒன்றின் விலை சுமார் ரூ. 1,10,000 ஆகும். பல மாதங்களாக வாழ்வாதாரத்திற்கான வருமானமின்றி தவிக்கும் விசைத்தறி உற்பத்தியாளர்கள், தங்களது விசைத்தறியை பழைய இரும்புக் கடையில், எடைக்கு எடை என்ற முறையில், ஒரு தறியை வெறும் ரூ. 31,000-க்கு விற்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதுவும் ஓரிரு மாதங்கள் மட்டுமே தாக்கு பிடிக்கும்.

பிறகு என்ன செய்வது என்று செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். வரும் நாட்களில் கஞ்சித் தொட்டி திறப்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று தங்களது வேதனையை பகிர்கின்றனர்.

கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், வசதியற்ற ஏழை, எளியவர்கள் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற தீர்க்க சிந்தனையுடன் அம்மாவும், தொடர்ந்து அம்மாவின் அரசும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி வந்தது.

கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றினால் பெருமளவு பாதிப்படைந்திருந்த கைத்தறி மற்றும் விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், 2021-ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு 169.41 லட்சம் சேலைகள் மற்றும் 169.31 லட்சம் வேட்டிகள் என்று 490.27 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்க ஆர்டர் வழங்கப்பட்டு, தொடர் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் அரசு ஜூலை மாதத்திலேயே விலையில்லா வேட்டி, சேலைக்கான ஆர்டரை வழங்கும் போது, நூலும் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.

இதனால் குறிப்பிட்ட காலத்தில் வேட்டி, சேலைகள் தயாரிக்கும் பணி முடிக்கப்பட்டு, பொங்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பே பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டுவிடும்.

ஆனால், இந்த அரசு பொறுப்பேற்றபின் விலையில்லா வேட்டி, சேலைக்கான ஆர்டர் ஆகஸ்ட் மாதம் தேதியிட்டு, இந்த நவம்பர் மாதம்தான் நெசவாளர்களுக்கு வழங்கப்பட் டுள்ளது. மேலும் முழுமையாக நூல் வழங்கப்படவில்லை. விலை உயர்வினால் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் வெளிச்சந்தையில் நூலை வாங்க முடியாமல், விலையில்லா வேட்டி, சேலையை உற்பத்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 200 யூனிட் விலையில்லா மின்சார மும், விசைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 750 யூனிட் விலையில்லா மின்சாரமும் அம்மாவின் அரசால் வழங்கப்பட்டு வந்தது.

மேலும், கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வழங்கும் விதமாக, கைத்தறித் துணிகளுக்கு தள்ளுபடி மானிய திட்டமும், 15 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி மானியமும், மாநில அரசின் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளுக்கு நூலின் தரத்தை மேம்படுத்தவும், இயந்திரங்களின் திறனை மேம்படுத்தவும், கார்டு வயர்ஸ், காட்ஸ், ஏப்ரான்ஸ் மற்றும் ஸ்பின்டல்ஸ் ஆகிய உதிரி பாகங்களை மாற்றம் செய்யும் பொருட்டும் 2,076 கோடி ரூபாயை அம்மாவின் அரசு நிதி ஒப்பளிப்பு செய்து வழங்கியது.

கைத்தறி நெசவாளர்களுக்கு 10,000 பசுமை வீடுகள் மற்றும் பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் மானியத்துடன் வீடுகள், சுமார் 75 ஆயிரம் நெசவாளர்களுக்கு தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு, புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019 அறிவிக்கப்பட்டு புதிய சலுகைகள், கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் சுமார் 1.60 லட்சம் நெசவாளர்களுக்கு நிவாரணம் என்று, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் தேவைகளை அம்மாவின் அரசு பூர்த்தி செய்து வந்தது.

முக்கிய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், கைத்தறி மற்றும் விசைத்தறி சங்கத்தினர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் போன்ற முக்கிய சங்கங்களை அழைத்துப் பேசி அவர்களது குறைகளைப் போக்கவும்; இறக்குமதி பஞ்சுக்கான வரியினை குறைக்கவும், மூலப்பொருள் ஏற்றுமதியினை தடை செய்யவும், நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மூலப்பொருட்களான, பஞ்சு மற்றும் நூல் ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; நூலிற்கு மானியம் வழங்க வேண்டும் என்றும்; நூல் மற்றும் பஞ்சுக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியினை முழுமையாக ரத்து செய்ய, ஜி.எஸ்.டி. குழு கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என்றும், விலையில்லா வேட்டி, சேலை தயாரிப்பதற்கான நூலினை நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News