உள்ளூர் செய்திகள்
தண்டவாளத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்.

தீவிர விசாரணை

Published On 2022-05-06 09:40 GMT   |   Update On 2022-05-06 09:40 GMT
ரெயில் தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை போட்டு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ராமேசுவரம்

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் இருந்து ராமேசுவரத்திற்கு வாரம் ஒருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த ரெயில் நேற்று முன்தினம் செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை  3 மணி அளவில் ராமேசுவரம்- தங்கச்சிமடம் இடையே வந்து கொண்டிருந்தது.
அப்போது ரெயில்வே தண்டவாள பாதையில் தீ கொழுந்துவிட்டு எரிவதைக் கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் தர்மராஜ், சுமார் 100 அடி தூரத்தில் ரெயிலை நிறுத்தினார். பின்னர் என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில்வே கார்டு கீழே இறங்கி பார்த்தனர்.

அப்போது தண்ட வாளத்தில் மோட்டார் சைக்கிளை போட்டு மர்ம நபர்கள் தீவைத்து விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மீது மணலை அள்ளி போட்டு தீயை அணைத்து அப்புறப்படுத்தினர். 

மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் ரெயில் பாதையில்  வேறு  நாசவேலைகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது தண்டவாள பகுதியில் எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட என்ஜின் டிரைவர், சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னர் ரெயிலை ராமேசுவரம் ரெயில் நிலையத்துக்கு ஓட்டி சென்றார்.
தண்டவாளத்தில் மோ ட்டார் சைக்கிள் எரிந்த சம்பவம் பற்றி அறிந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

எந்தவித ஆபத்தும் இல்லாமல் ராமேசுவரம் சென்று சேர்ந்த பயணிகள், என்ஜின் டிரைவருக்கு நன்றி தெரிவித்தனர்.ரெயில் தண்டவாளத்தில் தீவைத்து எரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் யாருடையது என்று ரெயில்வே போலீசா விசாரணை நடத்தினர். 

எரிக்கப்பட்ட வாகனத்தின் எண்ணைக்கொண்டு யாருக்கு சொந்தமான என்று விசாரணை மேற்கொண்டனர். அதில் எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ராமேஸ்வரம் மெய்யம்புளி பகுதியை சேர்ந்த ராஜசேகர் (வயது 41) என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. 
அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட தில் கடந்த 4-ந்தேதி இரவு வேலை முடிந்துவிட்டு மெய்யம்புளி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றபோது, பஸ் நிறுத்தம் அருகே 2 பேர் தன்னிடம் வாக்குவாதம் செய்ததாகவும், 

அதன் பின்னர் வீட்டிற்கு சென்று மோட்டார் சைக்கிளை வெளியில் நிறுத்தி விட்டு தூங்கி விட்டதாகவும், மறுநாள் காலையில் பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 
அதனடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

ராஜசேகருடன் தகராறில் ஈடுபட்ட மர்மநபர்கள் தான் அவரது மோட்டார்சைக்கிளை தூக்கிச்சென்று ரெயில் தண்டவாளத்தில் தீ வைத்தி ருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். 

அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து துப்பு துலக்கி வருகின்றனர்.  மோட்டார்சைக்கிளை ரெயில் தண்டவாளத்தில் போட்டு தீவைத்த நபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News