செய்திகள்
விபத்து நடந்த இடம்

உ.பி.யில் சாலையோரம் தூங்கிய பக்தர்கள் மீது பஸ் மோதிய விபத்தில் 7 பேர் பலி

Published On 2019-10-11 10:05 GMT   |   Update On 2019-10-11 10:05 GMT
உ.பி.யில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பஸ் மோதிய விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரை சென்றனர். யாத்திரை முடித்துவிட்டு அவர்கள் ஒரு பஸ்சில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

புலந்த்சாகர் மாவட்டத்தில் இரவில் ஓய்வெடுப்பதற்காக சாலையோரம் உள்ள நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் அந்த வழியாக மற்றொரு பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் படுத்து தூங்கிய பக்தர்கள் மீது ஏறியது. இந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி பலியாகினர்.

தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விபத்தில் பலியான உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பஸ் மோதிய விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்தார்.

வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் மீது பஸ் மோதிய விபத்தில் 7 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News