செய்திகள்
கோப்புபடம்

கோவையில் 24 மணி நேர மையங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

Published On 2021-09-22 12:09 GMT   |   Update On 2021-09-22 12:09 GMT
கோவையில் 24 மணி நேர தடுப்பூசி மையங்களுக்கு குறைந்த அளவே தடுப்பூசி வழங்கியதால் ஒரு சில மணி நேரம் மட்டுமே பொதுமக்களுக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவை:

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மாவட்டங்களிலும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கும், 2-வது வாரத்தில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கையிருப்பில் இருந்த தடுப்பூசிகளை மெகா தடுப்பூசி முகாமிற்கு பயன்படுத்தியதால் தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தவிர கடந்த 3 நாட்களாக பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டுள்ளது.

கோவையில் 24 மணி நேர தடுப்பூசி மையங்களுக்கு குறைந்த அளவே தடுப்பூசி வழங்கியதால் ஒரு சில மணி நேரம் மட்டுமே பொதுமக்களுக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் செயல்படும் 24 மணி நேர தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி முற்றிலும் தீர்ந்துவிட்டது.

அரசு ஆஸ்பத்திரியில் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டது. கோவிஷீல்டு தடுப்பூசி இல்லாததால்2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்கள் தடுப்பூசி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், சென்னையில் இருந்து தடுப்பூசி வருகையை பொருத்துதான் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பு இல்லை. இருப்பில் இருந்த கோவாக்சின் தடுப்பூசியை 24 மணி நேர தடுப்பூசி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து வழங்கி தடுப்பூசி செலுத்தப்பட்டது. இனி சென்னையில் இருந்து வந்தால் தான் தடுப்பூசி செலுத்தப்படும் என்றனர்.

Tags:    

Similar News