செய்திகள்
தேர்தல் பறக்கும் படையினர் பணம் பறிமுதல் செய்த வாகனம்

வேலூரில் ரூ.3.67 கோடி பறிமுதல்- பறக்கும்படை அதிரடி

Published On 2021-04-05 11:09 GMT   |   Update On 2021-04-05 11:09 GMT
சத்துவாச்சாரி எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக ரூ.65 லட்சம் கொண்டு செல்லப்பட்டது. அந்த பணத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 24 மணி நேரமும் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சத்துவாச்சாரி பகுதியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கிக்குச் சொந்தமான வாகனத்தில் ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக ரூ.1 கோடியே 56 லட்சம் பணம் கொண்டு வந்தனர். அந்த பணம் கொண்டு செல்வதற்காக உரிய அனுமதி பெறவில்லை. மேலும் முறையான ஆவணங்கள் இல்லை.

இதனையடுத்து வாகனத்துடன் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சத்துவாச்சாரி எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக ரூ.65 லட்சம் கொண்டு செல்லப்பட்டது. அந்த பணத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வேலூர் லக்ஷ்மி தியேட்டர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வங்கிக்கு பணம் எடுத்துச் சென்ற 2 வாகனங்களை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் ஒரு வாகனத்தில் ரூ.1 கோடியே 7 லட்சமும், மற்றொரு வாகனத்தில் 39 லட்சமும் இருந்தது. இதையடுத்து வாகனங்களை பறிமுதல் செய்து வேலூர் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி கலெக்டர் கணேஷ் ஒப்படைத்தனர்.

மொத்தம் ரூ.3.67 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மாவட்ட கருவூல அலுவலகத்தில் பணத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர். உரிய ஆவணங்கள் வந்த பிறகு பணம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.




Tags:    

Similar News