செய்திகள்
உடுமலை அமராவதி அணையில் மீண்டும் படகு சவாரி தொடக்கம்
அணை முற்றிலும் நிரம்பியதால் அணையில் இருந்து அமராவதி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன் மூலம் திருப்பூர்,கரூர் மாவட்டங்களில் சுமார் 55ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு பருவமழை அணைக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் பாம்பாறு, கூட்டாறு, தேனாறுகளில் நீர் பெருக்கெடுத்து தூவானம் அருவி வழியாக அணைக்கு வருகிறது.
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணை முற்றிலும் நிரம்பியதால் அணையில் இருந்து அமராவதி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதனிடையே அமராவதி அணையில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட சுற்றுலா மையங்கள் மீண்டும் திறக்க அரசு அனுமதியளித்துள்ளதால் அமராவதி அணைப்பூங்கா திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வருகின்றனர்.