வழிபாடு
அபிநயத்துடன் ஆடிப்பாடி இறை தொண்டு செய்யும் அரையர்கள்

அபிநயத்துடன் ஆடிப்பாடி இறை தொண்டு செய்யும் அரையர்கள்

Published On 2021-12-13 08:54 GMT   |   Update On 2021-12-13 08:54 GMT
திராவிட வேதம் தொகுத்த நாதமுனிகளால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரையர் சேவை தொடங்கப்பட்டது. வைணவ கோவில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வழிபாடுகளில் ஒன்று அரையர் சேவையாகும்.
அரையர் என்பவர்கள் வைணவ கோவில்களில் திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்யப்பிரபந்தத் தைப்பாடும் இறைத் தொண்டர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் ஆடவரே. இவர்கள் இப்பாடல்களை அபிநயத்துடன் தாள ஒலிக்கேற்ப ஆடிப்பாடும் நிகழ்ச்சி அரையர் சேவை என்று அழைக்கப்படுகிறது.
அரையர் என்பவர் கோவில் மூலவருக்கான பலவித சேவையில் தினசரி ஈடுபட்டாலும் நாதமுனிகள் ஏற் பாட்டுக்கிணங்க பொங்கல், பங்குனி உத்திரம், திருவாடிப் பூரம் உள்ளிட்ட திருவத்யயனம் உற்சவங்களில் இறை முன் அரையர் சேவை செய்வதை கட்டாயமாக்கியுள்ளனர்.

திராவிட வேதம் தொகுத்த நாதமுனிகளால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரையர் சேவை தொடங்கப்பட்டது. மேலை அகத்து ஆழ்வான் மற்றும் கீழை அகத்து ஆழ்வான் எனும் தன்னுடைய இரண்டு மருமகன்களுக்கும் நாதமுனிகள் நாலாயிர பிரபந்தங்களை பண் மற்றும் தாளத்துடன் கற்பித்ததாகவும் இவர்கள் வழி வந்தவர்களும் இவர்களிடம் கற்றவர்களுமே இன்று தமிழகமெங்கும் உள்ள அரையர்கள் என நம்பப்படுகிறது. முதன் முதலில் இச்சேவை ஸ்ரீரங்கத்தில் தொடங்கப்பட்டது.

வைணவ கோவில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வழிபாடுகளில் ஒன்று அரையர் சேவையாகும். திருக்கோவில் உற்சவர் முன் நடைபெறும் அரையர் சேவையின் போது அரையர்கள் பஞ்ச கச்சம் அணிந்து, அரையர் குல்லாய் எனப்படும் கூம்பு வடிவத் தொப்பியும், இறைவனுக்கு சாத்தப்பட்ட மாலையோடு வழக்கமான வைணவ சின்னங்களையும் அணிந்திருப்பர்.

காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட்டைகள் தொங்கும். குல்லாய் முழுவதும் சரிகை வேலைப்பாடுடன் அமைந்திருக்கும். இத்தகு அரிய கலை வைணவ கோவில்களில் மட்டுமே காணப்படும். உற்சவர் முன்பு நிகழ்த்தப்படும் இச்சேவையானது மூன்று பகுதிகளைக் கொண்டது. பிரபந்தத்தின் குறிப்பிட்ட பாடலை பாடுவது முதலாவதாகவும், பாடப்பெற்ற பிரபந்தத்தின் பொருளுக்கு ஏற்றாற்போல் அபிநயம் பிடித்து ஆடுவது இரண்டாவதாகவும், பாடலின் உட்பொருளை விளக்கிக்கூறுவது மூன்றாம் பகுதியாகவும் வடிவமைக்கப்பட் டுள்ளது இச்சேவை. இது கதையைத் தழுவி அமையா மல் ஒரு பாடலுக்கான பொருள் விளக்கம் தரும் நிலையில் அமைகிறது.

அரையர் ஒருவரே பல்வேறு பாத்திரங்களாக வேடப்புனைவு மாறுதல் இன்றி அபிநயிப்பர். காட்சி மாற்றங்களை, மாந்தர் கூற்று வழியே பாகுபடுத்துவர். பாசுரத்தின் ஒரு தொடருக்குப் பல நிலைகளில் அபிநயம் செய்யும் சிறப்பினை இக்கலையில் காணலாம்.

பலநாட்கள் பயிற்சிக்கு பின்னே அரையர்களை இச்சேவையை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் நிரம்பிய மொழிப்புலமை இச்சேவைக்கு அடித்தளம் என்பதால் பொதுவாகவே அரையர்கள் தமிழ்மொழியிலும், பிரபந்தத்திலும் மிகுந்த புலமை மிக்கவர்களாகவும் உள்ளனர். அரையர், விண்ணப்பம் செய்வார், பாடுவான், இசைக்காரர், தம்பிரான்மார் என்றெல்லாம் இவர்கள் அழைக்கப்படுகின்றனர். பிரபந்தங்களில் அரையர்கள் தமிழ்ச் சூர்ணிகைகளைச் சேர்த்துள்ளனர்.

ஆழ்வார் பாசுரங்களை இசையுடன் பாடி அனுபவித்து அவற்றின் விளக்கங்களை அழகுறப் பேசி நடிக்கும் முத்தமிழ்க்கலையே அரையர் சேவையாகும்.
Tags:    

Similar News