செய்திகள்
திருமாவளவனுடன் குணசீலன்

கோட்-சூட் அணிந்து புதிய தோற்றம்... திருமாவளவன் திடீர் மாற்றம்

Published On 2021-08-31 12:16 GMT   |   Update On 2021-08-31 12:46 GMT
மீசையை முறுக்கியவாறு காணப்படும் அந்த புகைப்படம் மற்றும் கோட், சூட் அணிந்த புகைப்படும் இவை இரண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் தனது 59-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அவரது பிறந்த நாளை கட்சி தொண்டர்கள் தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு அவரது பிறந்த நாளுக்கு முன்னதாக புதிய தோற்றத்தில் அவரது புகைப்படங்கள் வெளியானது.

கோட், சூட் அணிந்து நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து இருப்பதோடு அவரது தலைமுடியிலும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.


அவர் வழக்கமாக காணப்படும் தோற்றத்தை விட இந்த புகைப்படங்கள் அவரை வித்தியாசமாக காட்டியது. மேலும் இளைஞர்கள் போல தலைமுடியை மாற்றி எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியானது.

மீசையை முறுக்கியவாறு காணப்படும் அந்த புகைப்படம் மற்றும் கோட், சூட் அணிந்த புகைப்படும் இவை இரண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வித்தியாசமான தோற்றத்தில் காணப்படும் அவரது புகைப்படங்கள் விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சி தொண்டர்கள் அவரது புதிய தோற்றத்தை தங்களது செல்போனில் படமாக வைத்துள்ளனர்.

அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக லைக் பெற்று வருகின்றன. இந்த புகைப்படங்களை திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த சினிமா புகைப்பட கலைஞர் குணசீலன் வடிவமைத்தார்.


இதற்காக திருமாவளவன் 5 மணி நேரம் ஒதுக்கி உள்ளார். அரசியல் மற்றும் பொது வாழ்க்கைக்கு இடையே அவர் நேரம் ஒதுக்கி இருப்பது குறித்து குணசீலன் கூறியதாவது:-

நீண்ட காலமாக தலைவர் திருமாவளவனை வித்தியாசமான தோற்றத்தில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசை இப்போது நிறைவேறி உள்ளது. போட்டோ சூட்டுக்கு அவரது முகம் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் எப்படியாவது ஒருநாள் அவரை வர வழைத்து விதவிதமாக போட்டோ சூட் எடுக்க திட்டமிட்டேன். அவரது பிறந்த நாளையொட்டி எனது ஆசையை நிறைவேற்றினேன்.

இதுபற்றிய விவரங்களை தலைவரிடம் தெரிவித்தேன். அவரும் அதற்கான நேரம் ஒதுக்கி பிறந்த நாளுக்கு 5 நாட்கள் முன்னதாக இந்த போட்டோ சூட்டுக்கு ஒப்புக் கொண்டார்.

அவரை விதவிதமான பல்வேறு கோணங்களில் போட்டோ எடுத்து வெளியிட வேண்டும் என்று ஆசைபட்டேன். அதில் 2 தோற்றங்கள் மட்டும் மிகவும் அருமையாக அமைந்தது. அதனை வடிவமைத்து வெளியிட்டது எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.

இந்த 2 போட்டோக்களும் சமீபத்தில் கட்சிக்கு அப்பாற்பட்டு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. எனது ஆசையை நிறைவேற்றி கொடுத்த தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News