உள்ளூர் செய்திகள்
கொலை

புதுவை அருகே கழுத்தை துண்டால் இறுக்கி பெண் கொலை- கணவன் வெறிச்செயல்

Published On 2022-05-05 07:32 GMT   |   Update On 2022-05-05 07:32 GMT
புதுவை அருகே மனைவியை கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருபுவனை:

திருபுவனை அருகே கலித்தீர்தாள்குப்பம் பழனிநகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது50). இவரது மனைவி செந்தமிழ்செல்வி(45). இவர்களுக்கு யுவராஜ்(24) என்ற மகன் உள்ளார். இவர் எம்.எம்.பி.பி.எஸ். படித்து முடித்து விட்டு அங்குள்ள தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

கலியமூர்த்தி மதகடிப்பட்டில் உள்ள ஒரு காய்கறி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மது குடிக்கும் பழக்கமுள்ள கலியமூர்த்தி அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வார்.

தந்தையின் இந்த செயலால் அவரது மகன் யுவராஜ் வளவனூர் பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி பணிக்கு சென்று வந்தார்.

இதற்கிடையே கலியமூர்த்தி வீட்டுக்கு சரியாக வருவதில்லை என கூறப்படுகிறது.

மேலும் குடும்ப செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை என தெரிகிறது. இதனால் கணவன்மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று இரவு கலியமூர்த்தி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரிடம் செந்தமிழ்செல்வி வீட்டுக்கு வராதது குறித்தும், குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காதது குறித்தும் கேட்டதாக கூறப்படுகிறது.

இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே அக்கம் பக்கத்தினர் வந்து இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களை கலியமூர்த்தி எங்கள் குடும்ப சண்டையில் யாரும் தலையிட வேண்டாம் என கண்டித்து அவர்களை அங்கிருந்து விரட்டி அனுப்பினார்.

பின்னர் மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு இருவரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் தீராத கலியமூர்த்தி தனது கழுத்தில் அணிந்திருந்த துண்டை எடுத்து செந்தமிழ்செல்வி கழுத்தில் போட்டு இறுக்கினார்.

இதில் மூச்சு திணறி செந்தமிழ்செல்வி இறந்து போனார். இதை பார்த்ததும் கலியமூர்த்தி பயந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது செந்தமிழ்செல்வி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து திருபுவனை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப்இன்ஸ்பெக்டர் குமரவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் செந்தமிழ்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கலியமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

மனைவியை துண்டால் கழுத்தை இறுக்கி கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News