செய்திகள்
மைக்கேல் கிளார்க் - ஸ்டீவ் சுமித்

குறைந்த தொகைக்கு ஏலம்போனதால் ஐ.பி.எல். போட்டியை சுமித் புறக்கணிப்பார் - கிளார்க்

Published On 2021-02-21 07:14 GMT   |   Update On 2021-02-21 07:14 GMT
குறைந்த தொகைக்கு ஏலம்போனதால் ஐ.பி.எல். போட்டியை சுமித் புறக்கணிப்பார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சொல்கிறார்.
சிட்னி:

சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித்தை ரூ.2.2 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கியது. இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

20 ஓவர் கிரிக்கெட்டில் சுமித்தின் செயல்பாடு சிறப்பாக இல்லை என்பதை அறிவேன். கடந்த ஐ.பி.எல். போட்டி அவருக்கு சிறப்பாக அமையவில்லை. இருப்பினும் ஐ.பி.எல். ஏலத்தில் சுமித் மிகக்குறைவான தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ரூ.2.2 கோடி என்பது நல்ல தொகை தான். ஆனால் கடந்த சீசனில் சுமித் பெற்ற தொகையோடு (ரூ.12½ கோடி) ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு. ஐ.பி.எல். போட்டி 8 வாரங்கள் நடைபெறும். கொரோனா தடுப்பு தனிமைப்படுத்தும் நடைமுறையை எல்லாம் சேர்த்தால் மொத்தம் 11 வாரங்கள் அவர் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டியது இருக்கும். வெறும் ரூ.2.2 கோடிக்காக அவர் 11 வாரங்கள் தனது நண்பர்கள், குடும்பத்தினர், மனைவியை பிரிந்து ஐ.பி.எல். போட்டியில் ஆடுவதற்காக இந்தியா செல்லமாட்டார் என்றே நினைக்கிறேன். காயம் உள்ளிட்ட ஏதாவது ஒரு காரணத்தை காட்டி அவர் ஐ.பி.எல். போட்டியை தவிர்க்கலாம். அவரது முடிவு எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

இவ்வாறு கிளார்க் கூறினார்.
Tags:    

Similar News