உள்ளூர் செய்திகள்
கொலை

வேலூரில் கோட்டை பூங்காவில் வாலிபர் அடித்துக் கொலை

Published On 2022-05-06 08:13 GMT   |   Update On 2022-05-06 08:13 GMT
வேலூரில் கோட்டை பூங்காவில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் கோட்டை அகழியில் இன்று காலை ஆண் பிணம் மிதந்தது. இதனை கண்ட பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

தீயணைப்பு நிலைய ஊழியர்களுடன் இணைந்து அகழியில் மிதந்த பிணத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பிணமாக மிதந்த வாலிபர் உடலில் கல்லால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தன.

மேலும் வாலிபர் கிடந்த இடத்தில் அகழி கரையில் ரத்தம் கொட்டியிருந்தது. மேலும் வாலிபரை அருகில் உள்ள பூங்காவில் இருந்து இழுத்து வந்த தடயங்களும் இருந்தன.

வாலிபரை கோட்டை பூங்காவில் வைத்து அடித்து கொலை செய்து இழுத்து வந்து அகழியில் வீசியுள்ளனர்.

வாலிபரை தாக்கிய ரத்தம் படிந்த கல் ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். கொலையான வாலிபர் யார் என்பது தெரியவில்லை.

வாலிபர் உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்தது. இதன் மூலம் கொலை நடந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் யார்? கொலை செய்து வீசிய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

பூங்கா பகுதியில் மது, கஞ்சா பயன்படுத்தும் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கோட்டை பூங்காவில் வாலிபர் கொலையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News