செய்திகள்
முருங்கைக்காய்

சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி

Published On 2021-04-17 11:10 GMT   |   Update On 2021-04-17 11:10 GMT
ஆந்திராவிலிருந்து முருங்கைக்காய் பெருமளவில் விற்பனைக்கு வருவதால் சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் விளையும் முருங்கைக்காய்க்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் முருங்கை சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் தொடக்கத்தில் விவசாயிகளிடம் முருங்கைக்காய் கிலோ ரூ.40-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விலை படிப்படியாக வீழ்ச்சியடைந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கிலோ ரூ.4-க்கு விற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மேலும் குறைந்து ரூ.2-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

இதனால் விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரபல முருங்கை விவசாயி மற்றும் முருங்கைக்காய் மொத்த வியாபாரியுமான பாலமுருகன், போலையர் புரத்தை சேர்ந்த விவசாயி டேவிட் வேதராஜ் ஆகியோர் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக காலையில் ஏற்படும் பனிப்பொழிவு மற்றும் கோடை மழை காரணமாக முருங்கைக்காய் கலர் மாறியுள்ளது. மேலும் தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் முருங்கை விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆந்திராவிலிருந்தும் முருங்கைக்காய் பெருமளவில் விற்பனைக்கு வருவதால் சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் விளையும் முருங்கைக்காய்க்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலை அடுத்த மாதம் மாறும் என எதிர்பார்க்கிறோம் என வேதனையுடன் கூறினர்.

Tags:    

Similar News