கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் வெட்டிக்கொலை
கச்சிராயபாளையம்:
கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயபாளையம் போலீஸ் சரகம் அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மனோகர். அவரது மனைவி சங்கீதா (வயது 35). இவர்களுக்கு சுரேஷ், கோகுல் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனோகர் உடல்நலக்குறைவால் இறந்து போனார். எனவே சங்கீதா கூலிவேலை பார்த்து தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார்.
இன்று காலை சங்கீதா பால்ராம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே மட்டப்பாறை செல்லும் சாலையில் பிணமாக கிடந்தார். அவரது தலை, கை, கால்கள் மற்றும் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது. எனவே மர்ம நபர்கள் சங்கீதாவை வெட்டி கொன்றுள்ளனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர்.
தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் டி.எஸ்.பி. ராமநாதன், கச்சிராயபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது. சங்கீதாவுக்கும், அத்தியூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் சங்கீதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே சங்கீதாவை வெட்டி கொன்ற கொலையாளிகள் யார்? அவர்கள் எங்கு பதுங்கி உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.