செய்திகள்
கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருக்கும் போலீசார் மீது நடவடிக்கை
கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மனித உரிமை காப்பாளர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பத்தில் மனித உரிமை காப்பாளர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் பிரபா கல்விமணி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் திருமேனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மனித உரிமை காப்பாளர் பாபுவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டிப்பது, கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருக்கும் போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் இளைஞர்களின் வாழ்க்கையை பாழாக்கும் கஞ்சா விற்பனையை தடுக்க கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களின் சார்பில் வருகிற 1-ந் தேதி கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் குளோப், அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு வெண்புறாகுமார், நிர்வாகிகள் முருகப்பன், ரமேஷ், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.