மூடிச்சூரில் ஆக்கிரமித்து கட்டிய ஆஞ்சநேயர் கோவில் இடிப்பு- சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியதாக 9 பேர் மீது வழக்கு
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரத்தில் அடையாறு ஆற்றின் கரையோரம் ஆஞ்சநேயர் கோவில் இருந்தது.
நீர் நிலையை ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டு இருப்பதாக கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில் முழுவதும் இடிக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் இடிக்கப்பட்டபோது போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது.
இதையடுத்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணிமங்கலம் போலீசில் குன்றத்தூர் தாசில்தார் பிரியா புகார் அளித்தார். போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பாக ஆஞ்ச நேயர் கோவில் நிர்வாகி ரமணன், லலிதா உள்பட 9 பேர் மீது இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து உள்ளார். அவர்கள் மீது 7 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து அதனை அனுப்பியவர்களின் விவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
கோவில் இடிக்கப்பட்டது தொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.