உள்ளூர் செய்திகள்
ஆண்டியகவுண்டனூரில் சிதலமடையும் சமுதாய கூடம்
சமுதாய நலக்கூடத்தில் விசேஷங்களை நடத்த மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆண்டியகவுண்டனூரில் எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் சமுதாய நலக்கூடம், 2001ம் ஆண்டில் கட்டப்பட்டது. சுற்றுப் பகுதியைச் சேர்ந்த மக்கள் குறைந்த செலவில் வீட்டு விசேஷங்களை நடத்திக் கொள்ளவும், பிற தேவைகளுக்காகவும் ரூ. 5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில், இக்கட்டிடம் கட்டப்பட்டது.
தற்போது கட்டிடத்தின் முகப்பு மற்றும் இதர பகுதிகளில், கான்கிரீட் பூச்சு உதிர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஒரு பகுதியில் தடுப்பு முற்றிலுமாக உடைந்து விழுந்து கம்பிகள் மட்டும் வெளியில் தெரியும் அவல நிலை காணப்படுகிறது. இதனால் சமுதாய நலக்கூடத்தில் விசேஷங்களை நடத்த மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
எனவே சமூதாய நல கூட கட்டிடத்தை உடனடியாக புதுப்பித்து இரவு நேரங்களில், அவ்வளாகம், குடிமகன்கள் புகலிடமாக மாறுவதையும் தடுக்க வேண்டும். மேலும் கூடுதலாக அறைகள் கட்டி தந்தால் பயனுள்ளதாக இருக்கும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.