செய்திகள்
தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் விராட் கோலி, முகமது சிராஜ்
இங்கிலாந்தில் இருந்து பாதுகாப்பாக விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரை அழைத்து வர சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது ஆர்சிபி.
மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானத்தில் நடக்க இருந்த இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்திய அணி வீரர்கள் அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். இங்கிலாந்து தொடரில் இடம்பெற்ற இந்திய வீரர்களைத்தவிர மற்றவர்கள் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களை அமீரகம் அழைத்துவர அனைத்து ஐ.பி.எல். அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றன. ஆர்.சி.பி. அணி கேப்டன் விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரை தனி விமானம் மூலம் இங்கிலாந்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வர ஆர்சிபி அணி முடிவு செய்துள்ளது.
ஆர்.சி.பி. ஏற்பாடு செய்துள்ள தனி விமானம் மூலம் இருவரும் நாளை அமீரகம் சென்றடைகிறார்கள். ஏற்கனவே, மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள ரோகித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தனி விமானம் மூலம் அமீரகம் சென்றடைந்துள்ளனர்.