உள்ளூர் செய்திகள்
புதூரில் மரங்களில் பிடித்த தீயை தீயணைப்பு துறையினர் அணைத்த போது எடுத்த படம்.

திருச்செந்தூர் அருகே நள்ளிரவில் பனை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது

Published On 2022-05-06 09:50 GMT   |   Update On 2022-05-06 09:50 GMT
திருச்செந்தூர் அருகே நள்ளிரவில் திடீரென பனை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரம் புதூரை சேர்ந்தவர் வள்ளிமுருகன்(40). இவருக்கு காயாமொழி - திருச்செந்தூர் சாலை ஓரத்தில் சொந்தமாக இடம் உள்ளது. இந்த இடத்தில் பனைமரங்கள் மற்றும் சீமை கருவேல மரங்கள் உள்ளது.

 பனை மரங்களுக்கு இடையே உயர் மின் கம்பிகள் செல்கின்றது. நள்ளிரவில் இந்த உயர் மின் கம்பிகளின் மின்கசிவால் பனை மரத்தில் திடீரென தீ பிடித்தது. தீ வேகமாக பரவி சீமை கருவேலம் மரங்களில் பிடித்து எரிந்தது. இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்பு துறையினர் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் முத்து ராமன் உத்தரவின்பேரில் உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

 தீயணைப்பு துறையினர் மற்றும் மின் ஊழியர்களின் விரைவான பணியால் தீ விரைந்து அணைக்கப்பட்டது. இவர்களின் இந்த பணியை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
Tags:    

Similar News