செய்திகள்

பாரதீய ஜனதா பொதுக்கூட்டம்- பிரதமர் மோடி திருப்பூரில் நாளை பேசுகிறார்

Published On 2019-02-09 10:28 GMT   |   Update On 2019-02-09 10:28 GMT
திருப்பூரில் நாளை நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இதற்காக பெருமாநல்லூரில் 70 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. #bjp #pmmodi

திருப்பூர்:

பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியினர் தற்போதே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

பிரதமர் மோடி வட மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவர் திருப்பூரில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக திருப்பூர் பெருமாநல்லூரில் 70 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

பொதுக்கூட்ட மேடை அருகே மற்றொரு மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் அரசு திட்ட பணிகளை மோடி தொடங்கி வைக்கிறார்.

சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையே புதிய மெட்ரோ ரெயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். பாம்பன் புதிய பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பரமக்குடி- தனுஷ்கோடி இடையே 4 வழிப்பாதை, ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதை ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

அரசு திட்ட பணிகளை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், பொள்ளாச்சி, கரூர் ஆகிய 8 தொகுதிகளை சேர்ந்த பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

திருப்பூரில் நடைபெறும் பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும், அரசு திட்ட பணிகளை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் நாளை மதியம் 2.35 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.

அங்கிருந்து 2.40 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 3.05 மணிக்கு பெருமாநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு செல்கிறார்.

பின்னர் 3.15 மணி அளவில் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். மதியம் 3.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அருகில் அமைக்கப்பட்டு உள்ள பாரதீய ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு 3.30 மணியளவில் செல்கிறார்.

அங்கு பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். இதில் பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். மாலை 4.20 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் அவர் 4.55 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். மாலை 5.10 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடகம் செல்ல உள்ளார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி கோவை- திருப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பொதுக்கூட்டத்தில் 3 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் மேற்கு மாவட்டம் மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

பிரதமர் மோடி வருகையையொட்டி கோவை - திருப்பூரில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை விமான நிலையத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


பொதுக்கூட்ட மேடை அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் ஹெலிகாப்டரை இறங்க வைத்து ஒத்திகையும் நடைபெற்றது.

பிரதமர் வருகையையொட்டி டெல்லியில் இருந்து தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் 50 பேர் பெருமாநல்லூர் வந்துள்ளனர்.

அவர்கள் விழா மேடை, ஹெலிகாப்டர் தளத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் தமிழக கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் இன்று திருப்பூர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். டி.ஜி.பி. ராஜேந்திரன் இன்று மாலை திருப்பூர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார்.

பிரதமர் மோடி பேச உள்ள பொதுக்கூட்ட மேடை தேசிய பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேடைக்கு வெளியே தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News