ஆன்மிகம்
அத்தி வரதர்

அதிசயங்கள் நிறைந்த அத்தி வரதர்

Published On 2019-07-03 08:36 GMT   |   Update On 2019-07-03 08:46 GMT
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தின் மூலவ மூர்த்தியான வரதரும் அத்தி மரத்தால் உதயமானவர்தான். ஆனால் இவருக்கு மட்டும் தனி சிறப்புகள் உருவாகி இருக்கின்றன.
அத்தி மரத்தில் தெய்வ சிலைகளை உருவாக்குவது என்பது தமிழ்நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழக்கத்தில் உள்ளது. வடதமிழ்நாட்டில் பல ஆலயங்களில் அத்தி மரத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலைகள் இன்னமும் வழிபாட்டில் உள்ளன.

அதே போன்றுதான் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தின் மூலவ மூர்த்தியான வரதரும் அத்தி மரத்தால் உதயமானவர்தான். ஆனால் இவருக்கு மட்டும் தனி சிறப்புகள் உருவாகி இருக்கின்றன. இதற்கு காரணம் இந்த அத்தி வரதர் வரதராஜபெருமாள் ஆலயத்தின் வரலாற்றோடு பின்னி பிணைந்தவர் என்பதால்தான்.

இந்த ஆலயத்தில்தான் பிரம்மன் தனக்கு தியானம் செய்யும் பக்குவம் வேண்டும் என்பதற்காக பல தடைகளை கடந்து யாகம் நடத்தினார். அந்த யாக குண்டத்தில் இருந்து தோன்றியவர்தான் அத்தி வரதர். இந்த தலம் அத்தி மரத்தால் சூழப்பட்டு இருந்ததால் வரதருக்கு அத்தி வரதர் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் அத்தி மரத்தில் மூலவர் உருவானதால் அத்தி வரதர் என்ற பெயர் ஏற்பட்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

காஞ்சீபுரத்தில் மட்டுமே அத்தி வரதரை பக்தர்கள் காண முடியும். இந்தியாவில் முக்தி தரும் தலங்கள் என்று 7 தலங்களை குறிப்பிடுவார்கள். அயோத்தி, மதுரா, துவாரகை, காசி, அவந்தி, அரித்துவார், காஞ்சீபுரம் ஆகியவையே அந்த 7 முக்தி தலங்களாகும்.

இதில் அயோத்தி, மதுரா, துவாரகை ஆகிய மூன்றும் விஷ்ணு தலங்கள். காசி, அவந்தி ஆகிய இரு தலங்களும் சைவ தலங்கள். அரித்துவார் அம்மாள் இருக்கும் தலமாகும். காஞ்சீபுரம் தலம் மட்டுமே அனைத்து கடவுள்களும் நிறைந்ததாக சொல்லப்படும் தலமாகும். எனவே தான் முக்தி தரும் 7 தலங்களில் காஞ்சீபுரம் தலம் முதன்மையான தலமாக திகழ்கிறது.

காஞ்சீபுரத்தில் 108 சிவாலயங்களும், 100-க்கும் மேற்பட்ட வைணவ தலங்களும் உள்ளன. என்றாலும் வரதராஜ பெருமாள் ஆலயத்திற்கு இருக்கும் சிறப்பு ஒப்பிடமுடியாதது. எனவே தான் இந்த தலத்தில் உள்ள அத்தி வரதரும் பக்தர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இந்த அத்தி வரதரை கிருத யுகத்தில் பிரம்மா வழிபட்டார். திரேதா யுகத்தில் கஜேந்திர யானை வழிபட்டது. துவாபர யுகத்தில் பிரகஸ்பதி வழிபட்டார். கலியுகத்தின் தொடக்கத்தில் மீண்டும் பிரம்மா யாகம் நடத்தி வழிபட்டார். அப்போது யாகத்தீ பட்டு அத்தி வரதர் விக்கிரகம் பின்னமாகி விட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரம்மா என்ன செய்வது என்று திகைத்தபோது வரதராஜபெருமாளே அசரீரியாக, “என்னை அனந்தசரஸ் திருக்குளத்தில் தண்ணீருக்கு அடியில் வைத்து விடுங்கள். 40 ஆண்டுகளுக்கு ஒரு தடவை மீண்டும் வெளியில் எடுத்து வழிபடுங்கள்” என்று கூறினார். அதன்படிதான் அத்திவரதர் திருக்குளத்தில் தண்ணீருக்குள் வைக்கப்பட்டதாக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News