செய்திகள்
கால்வாயில் கவிழ்ந்த கார் (உள்படம்: பலியான தொழில் அதிபர் சுப்பிரமணியன்)

நெகமம் அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து தொழில் அதிபர் பலி

Published On 2019-12-02 11:52 GMT   |   Update On 2019-12-02 11:52 GMT
நெகமம் அருகே இன்று காலை கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் தொழில் அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெகமம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொடுமுடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). இவர் கேரள மாநிலம் மூவாற்றுப்புழாவில் குடும்பத்துடன் தங்கி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனைவி, குழந்தைகளை கொடுமுடிக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் ஆறு, குளம், குட்டைகள் நிரம்பியது. இன்று அதிகாலை சுப்பிரமணியன் மட்டும் காரில் கொடுமுடிக்கு புறப்பட்டார். அப்போது லேசான சாரல் மழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கார் பொள்ளாச்சி- தாராபுரம் ரோடு சுந்தரகவுண்டனூர் அருகே உள்ள தனியார் பள்ளி அருகே வந்தது. அப்போது கார் அங்குள்ள கால்வாயில் பாய்ந்தது. பாய்ந்த வேகத்தில் கார் தண்ணீரில் மூழ்கியது. காருடன் சுப்பிரமணியன் தண்ணீரில் சிக்கினார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த பார்த்தனர். அப்போது கார் தண்ணீரில் மிதந்தது. காரில் சிக்கியவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரில் சிக்கிய சுப்பிரமணியனை பிணமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சுப்பிரமணியனின் குடும்பத்தாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News