செய்திகள்
கொள்ளை

கோவையில் டிரைவர் வீடு உள்பட 3 இடங்களில் 46 பவுன் தங்க நகைகள் கொள்ளை

Published On 2021-10-15 10:05 GMT   |   Update On 2021-10-15 10:05 GMT
கோவையில் டிரைவர் வீடு உள்பட 3 இடங்களில் 46 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் அருள் ஜோதி (வயது 50). டிரைவர்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த வளையல், செயின், கம்மல் , மோதிரம் உள்பட 6½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீட்டிற்கு திரும்பிய அருள் ஜோதி வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அருள்ஜோதி மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவஇடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் வீட்டில் 6½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

செல்வபுரம் அருகே உள்ள அமுல் நகரை சேர்ந்தவர் வரதராஜன் (64). நகைபட்டறை தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவி மற்றும் மகளுடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார்.

அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த வளையல், செயின், மோதிரம் உள்பட 9½ பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். நேற்று வீட்டிற்கு திரும்பிய வரதராஜன் நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுந்தராபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி கவுரி (73). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரலட்சுமி விரத பூஜையை முன்னிட்டு தனது 30 பவுன் தங்க நகைகளை கழற்றி பீரோவில் வைத்து இருந்தார். சம்பவத்தன்று பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இதில் அதிர்ச்சியடைந்த கவுரி இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News