செய்திகள்
1.5 ஆண்டுகளுக்கு பின் உடுமலை - சின்னாறு இடையே பஸ் போக்குவரத்து தொடக்கம்
பஸ்களில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி அல்லது 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா தொற்று இல்லை என்ற சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மறையூர், மூணாறு பகுதிகளுக்கு தமிழகம் மற்றும் கேரளா மாநில பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த வழித்தடத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது உடுமலையில் இருந்து மாநில எல்லையான சின்னாறு வரை உடுமலை அரசு போக்குவரத்து பணிமனை கிளையில் இருந்து இரண்டு அரசு பஸ்களும், கேரள மாநில பஸ்கள் மூணாறில் இருந்து சின்னாறு வரையும் இயக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மாநில எல்லையில் இறங்கி மறு எல்லை வரை நடந்து சென்று பஸ் ஏறி செல்கின்றனர். பஸ்களில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி அல்லது 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா தொற்று இல்லை என்ற சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
கேரள மாநிலம் மூணாறு, மறையூர், காந்தலூர், கோவில்கடவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மருத்துவம், மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களுக்கு உடுமலையை சார்ந்தே உள்ளனர்.
எனவே இரு மாநில அரசுகள் பேச்சு நடத்தி முழுமையான போக்குவரத்தை தொடங்கவும், கூடுதல் பஸ்கள் இயக்கவும் வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.